Friday 25 August 2017

கடல்விலாங்கு மீன் (Eel)

 கடல் விலாங்கு மீனைப் பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே ஒரு பதிவு உண்டு. என்றாலும், புதிய தகவல்களைப் பதிவிடுவது நல்லதுதானே? கடல் விலாங்குகள் கடலடி சகதி வாழ் மீன்கள். பகலில் துயில் கொண்டு இரவில் வேட்டையாடும் உயிர்கள் இவை. விலாங்கு மீன்களின் கண்கள் பெரியவை. ஆனால், இவற்றில் பெரிதாக பார்வைத்திறன் கிடையாது. இருளையும் ஒளியையும் பிரித்தறிய மட்டுமே விலாங்கின் கண்கள் பயன்படும்.
ஆகவே, கண்களை நம்பால் விலாங்கு மீன், முழுக்க முழுக்க மோப்பத்திறனையே நம்பி வாழும். பகலில் மறைந்திருந்து இரவில் புறப்படும் விலாங்குகள், மோப்பத்தால் மட்டுமே இரையைப் பின்தொடர்ந்து வேட்டையாடக் கூடியவை.
கடலடியில் சகதி மணல், பார் இடுக்குகளைத் தவிர, மூழ்கிய கப்பல்கள், படகுகளிலும் விலாங்குகள் நிரந்தரமாக தங்கி வாழும். ‘மூழ்கிய கப்பல்களில் உள்ள புதையல்களைக் காக்கும் காவலாளி‘ என்ற செல்லப்பெயரும் கூட விலாங்குக்கு உண்டு.
கடல்விலாங்குகளில் சில 165 கிலோ நிறையும், 15 ஆண்டுகால வாழ்நாளும் கொண்டவை. விலாங்குகள் மின்னல் வேகத்தில் எதிரியைத் தாக்கக் கூடியவை. தாடையில் கூரிய ஊசிப்பற்கள் இருந்தாலும் விலாங்கின் தாடை பலமில்லாதது. எனவே, இரையைக் கடித்ததும், உடலை முறுக்கி, அதன் மூலம் இது இரையின் தசையைப் பிய்த்தெடுக்கும். வளர்ந்த மிகப்பெரிய விலாங்கு, மலைப்பாம்பு போல மனிதர்களின் கையைச் சுற்றி கையை உடைத்தெறியக் கூடியது.

விலாங்கின் உடலில் உள்ள வழுவழுப்புத்தன்மை (Mucus) மூன்று விதங்களில் பயன்தரக் கூடியது. ஒன்று பார் இடுக்குகளில் விலாங்குகள் நுழையும் போது இந்த வழுவழுப்பு காரணமாக சிராய்ப்புக்காயம் ஏற்படாது. இரண்டாவதாக, வேகமாக நீந்த இந்த வழுவழுப்புத்தன்மை உதவுகிறது. அதோடு எதிரிகளின் கையில் சிக்கும்போது பிடிபடாமல் வழுக்கிச் செல்லவும் வழுவழுப்புத் தன்மை பயன்படுகிறது. 

No comments :

Post a Comment