Tuesday 22 August 2017

அஞ்சாளை (Moray)
பார்வைக்கு வில்லன் போன்ற முகவெட்டு கொண்ட ஒரு கடல்மீன் அஞ்சாளை. பார்களில் வாழும் மீன் இது. அஞ்சாளையை ஆங்கிலத்தில் Moray என அழைப்பார்கள். அஞ்சாளையில் மொத்தம் 200 வகைகள். இதில் உண்மை அஞ்சாளைகள் ஏறத்தாழ 166. மூச்சு செவுளை அடுத்து, முதுகுத் தூவி தொடங்கி உடலின் பின்பகுதி வரை ஓடும் அஞ்சாளைகள், உண்மை அஞ்சாளைகள் ரகம். இதர அஞ்சாளைகள் பாம்பு அஞ்சாளைகள் எனக் கருதப்படுகின்றன. அவை மொத்தம் 34 ரகம்.
அஞ்சாளை, தட்டையான உடல் கொண்டது. செதிள்கள் அற்ற இதன் தோல் முரடானது, பதனிட்ட தொலி (leather) போன்றது. இந்த மீனின் முகுதுத்தூவியும், அடித்தூவியும் உடல் அளவுக்கு நீண்டுகிடக்கும். சுருங்கிய தோல்மடிப்புக்குள் மறைந்தும் மறையாமலும் இந்த தூவிகள் தெரியும்.
அஞ்சாளையின் நீண்ட முதுகுத்தூவி, உண்மையில் ஒரே தூவி அல்ல. அது 3 தனித்தனி தூவிகளின் கூட்டமைப்பு. வால்தூவி, அடித்தூவியுடன் இணைந்த உடைபடா ஒரே கட்டமைப்பிலான தூவி, அஞ்சாளையின் முதுகுத்தூவி.
அஞ்சாளை மீனின் செவுள் ஒட்டை சிறியது, வட்டமானது, பற்கள் பெரியவை. கூர்மையானவை. உடலின் பின்பகுதியை பார்களில் நங்கூரமிட்டது போல சுற்றிக் கொண்டு தலையை மட்டும் காற்றில் ஆடும் இலை போல நீரின் அசைவுக்கேற்ப அஞ்சாளை அசைத்தாட்டியபடி இருக்கும். அடிக்கடி திறந்து திறந்து மூடும் வாயால், அருகில் வரும் இரையை கபக்கென கவ்வி அஞ்சாளை இரையாக்கும்.
மீன்களில் இரண்டு இணை (Set) தாடைகள் கொண்ட மீன் அஞ்சாளை மீன். வெளிப்புற தாடையும், அதில் கூரிய பற்களும் ஒருபுறம் இருக்க, இதன் வாயின் உட்புறம் தொண்டையில் மற்றொரு தாடை, பற்களுடன் அமைந்திருக்கும். இந்த உட்புறத் தாடையை நாம் பார்க்க முடியாது. அஞ்சாளை வாயை மூடியிருக்கும் போது, உள்ளே மறைந்திருக்கும், இந்த அடித்தொண்டை (Pharyngeal) தாடை, அஞ்சாளை வாயைப் பிளக்கும் போது முன்னே வரும்.
இரை மீனை அஞ்சாளை பிடிக்கும்போது, அதன் முதல் தாடை இரையைக் கவ்வி நகரவிடாமல் செய்யும். உட்புற தாடை இரையைக் கடித்து உள்ளே தள்ளும். சிலவகை மீன்கள் இரையை உள்ளே தள்ள, உறிஞ்சுத் திறனைப் பயன்படுத்துவதைப் போல அஞ்சாளை, இரையை உள்ளே தள்ள, அதன் ரகசிய ஆயுதமான உள்புற தொண்டைத் தாடையைப் பயன்படுத்துகிறது.
அஞ்சாளையின் கடியில் நஞ்சு இல்லை. என்றாலும், அஞ்சாளையால் ஏற்படும் கடிகாயம் ஆற நாளாகும். அஞ்சாளை இரவில் இரைதேடும் மீன் என்றாலும், பகலில் தன் பக்கமாக வரும் இரைமீனையும் கவரும். கிடைக்கும் வாய்ப்பை எந்த ஒரு வாய்ப்பையும் அஞ்சாளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும். இரை கிடைக்காத வேளையில் பார்களை விட்டு விலகி, திறந்த மணல்வெளியிலும் இது திரிந்து மோப்ப ஆற்றல் மூலம் இரை தேடும். அஞ்சாளை, குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி, மிக வேகமாக நீந்தக்கூடியது. நீந்தும்போது மீன் போல நீந்தாமல், இது பாம்பு போல நீந்தும். கடலில் அசைவற்ற நீரை விட, வேகமாகப் பாயும் நீரையே அஞ்சாளை விரும்பும்.
கடலில் முக்குளிக்கும் மனிதர்களையும் அஞ்சாளை தற்காப்புக்காகத் தாக்குவதுண்டு.
இரைமீன் பார்ப் பொந்தில் ஒளிந்து கொண்டால், தனது வாயை உள்ளே நுழைத்து இரையைப் பிடித்துக் கொள்ளும் அஞ்சாளை, இரையை வெளியே இழுக்க, தன் வால் நுனியில் முடிச்சுப் போட்டுக் கொள்ளும். பின் அந்த முடிச்சை உடல் வழியே முன்புறமாக நகர்த்தி, பாரில் முட்டவைக்கும். பின்னர் அந்த முடிச்சு, பார்ப்பொந்தைச் சுற்றி நின்று அழுத்தம்தர, து தரும் அழுத்தத்தில் அஞ்சாளை இரையை வெளியே இழுக்கும். முடிந்த வரை இரைமீனை வெளியே கொண்டுவர பாடுபடும் அஞ்சாளை, முடியாவிட்டால் வாய் கவ்விய அளவுக்கு தசையைப் பிய்த்தெடுத்த பிறகு இரையை உயிருடன் விடும்.
சிலவகை அஞ்சாளைகளுக்கு நண்டு, மூரை (Sea urchin), சிப்பி, மட்டி (Clam) போன்றவயே உணவு. இவற்றை நொறுக்கித் தின்ன வசதியாக சிலவகை அஞ்சாளைகளின் பற்கள் மழுங்கலாக, மொண்ணையாக இருக்கும்.
அஞ்சாளை அடிக்க வாயைத் திறந்து மூடக்கூடியது. பார்வைக்கு இது  எதிரிகளுக்கு விடப்படும் எச்சரிக்கை போலத் தெரியலாம். ஆனால், மூச்செடுப்பதற்காகவே அஞ்சாளை அடிக்கடி வாயைத் திறந்து மூடுகிறது.
அஞ்சாளைகளுக்கு மற்ற மீன்களுக்கு இருப்பது போல செவுள் மூடி எதுவும் இல்லை. செவுள் மூடியைத் திறந்து திறந்து மூடுவதன் மூலம், கடல்நீரை சுவாச அறைக்குள் பாய்ச்ச மீன்களால் முடியும். ஆனால், அஞ்சாளையால் அது முடியாது. எனவே வாயை அடிக்கடி திறந்து கடல்நீரை வெளியில் இருந்து நேரடியாக அஞ்சாளை விழுங்கி, உள்ளே செலுத்துகிறது. வாயை அடிக்கடி திறப்பதை நிறுத்தினால் அஞ்சாளை மூச்செடுக்க முடியாமல் இறந்து போகலாம்.
அஞ்சாளை சிலவேளைகளில் பார்க்கடலில் களவா மீனுடன் சேர்ந்து இரையை வேட்டையாடும். அஞ்சாளை இடத்துக்கேற்றபடி பல்வேறு வண்ணங்களிலும் திகழும். அஞ்சாளையின் பாதுகாப்பில், அதன் அருகே பார்ப்பொந்துகளில் வாழும் நட்பு மீன்களும் உண்டு.

அஞ்சாளை உண்ணத்தகுந்த மீன். நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில், அஞ்சாளை பற்றி ஏற்கெனவே ஒரு பதிவும் உண்டு.

No comments :

Post a Comment